Thursday, June 11, 2009

சொல்லாமல் சொன்னது


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக...
பரிமாறிக்கொண்ட
மௌனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்.

(C) karthikaneya@gmail.com

Friday, May 29, 2009

தோல்வியின் பதிவு

தேவ தருணங்களைப்
பதிவு செய்ய முயலாதே
தோற்றுப்போவாய் என
எச்சரித்திருந்தாள்
வாகனத்தின் பின் சாளரம் வழியே,
சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து
எனை அழைத்து அருள்செய்த
என் குட்டி தேவதை.

(C) karthikaneya@gmail.com

Tuesday, May 19, 2009

ஆரஞ்சுப் புன்னகை

ஆரஞ்சு நிலவாக ஒளிர்ந்த
அந்திச் சூரியன்
அலுவல் நேரம் தாண்டியும்
அகலாமல் நின்றது மேற்கில் -
ரசிக்கப்படாத ஏக்கத்தில்.

அனிச்சையாய் நகரும் கூட்டத்தில்
பரபரப்பான கடைவீதியின்
சாலையைக் கடக்கையில்
தற்செயலாய்
திரும்பிப் பார்த்து
திகைத்து நின்றபோது
ஸ்தம்பித்தது போக்குவரத்து.

புன்னகைத்தவாறே
கீழிறங்கத் தொடங்கியது
சூரியன்.
(C) karthikaneya@gmail.com

நண்பர்கள் பரிசளித்த தோழிகள்

'கோபிக்கிறாள் என் மனைவி
குறுஞ்செய்தி அனுப்பாதே'
என்றொரு நண்பன்
கூறிய பின்னர்,

தன் கணவன் எனை அழைக்கும்
செல்லப் பெயர் சொல்லி
அழைத்துப் பேசினாள்
இன்னொரு நண்பனின் மனைவி.

கொடுத்து வைத்த - என்
தோழர்களுக்கு வாய்த்திருக்கிறது
அத்தனை சீக்கிரம் சலித்துப் போகாத
குடும்ப வாழ்க்கையோடு
கணவன் என்னும் கதாபாத்திரம்.
(C) karthikaneya@gmail.com

Monday, May 11, 2009

சந்தேகத்துக்குரிய 'உயிர்த்தோழி'

ஒரு கார்காலத்தின் முதல்நாளில்
மழையின் வண்ணம் குறித்து
விவாதிக்கத் தொடங்கினோம்.

இளந்தூறலாகத் தொடங்கிய மழை
வானவில் எழும் முன்
கரைந்துபோனது.

அடுத்தடுத்த நாட்களிலும்
காணக்கிடைத்த
மழைக்கான சாத்தியக்கூறுகளை
மறுத்த நீ
இடியையும் மின்னலையும்
என்னிடம் அனுப்பிவைத்தாய்.

நிலை மீளும் முன் - ஒரு
வானவில்லையும்
வரைந்து பரிசளித்தாய்.

நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன.

Wednesday, April 29, 2009

தீராத் தேடல்

ஒரு முகம் தேடி
ஓயாமல் அலைகிறது
கோடைகள் தோறும் வெயில்.

இன்றும் கூட - ஒரு
தென்னங்கீற்றின்
முன் தின மழைத் துளியில்
தொடங்கிய பயணத்தில்
முன்பகலில் இளைப்பாறிக்கொண்டிருந்தது
மூங்கில் இலை நுனியில் - பின்
மெல்ல உருகத் தொடங்கியது - ஒரு
குயிலின் கானம்.

குரலின் முகம் தேடி
தகித்து எரித்து
அலைந்து களைத்து
உறங்கத் தொடங்கிய வெயிலின்
உறங்கா கேள்வி:
'அத்துவானக் காட்டில்
யாருக்கிந்த தாலாட்டு?'

கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை
நீ அறியாயோ வெண்வெயிலே!

(C) karthikaneya@gmail.com

Saturday, April 25, 2009

மிச்சமிருக்கும் பரஸ்பரமல்லாத ஒன்று

புறக்கணிப்புகளின் காயங்களைப்
புன்னகையின் பின்னால்
ஒளித்துக் கொண்டேன்.
கண்ணீர்த் துளிகளுக்குத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
ஓர் இடம் - பின்
தீர்மானித்துக் கொண்டேன்
எதிர்ப்படும் ஒரு மழை நாளில்
தடயங்களின்றித்
தொலைத்துவிட வேண்டுமென்று.

பின்னொரு நாள் வந்தது
அந்த மழை நாள்
உன்னை எதிர்நோக்கியிருந்த
மழை நாட்கள்
இத்தனை கடுமையில்லை என
துக்கித்தவாறு.

திரட்டிச் சென்ற
கண்ணீர்த் துளிகளைக்
கரைத்த மழையில்
நனைந்தோ நனையாமலோ
வீடு திரும்பி
தலை துவட்டிக் கொண்டேன்.

தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு.

(C) karthikaneya@gmail.com

முள்ளின் மனம்

வேடிக்கையான
விளையாட்டுப் பொருளானது
என் கைக்கடிகாரம்
குழந்தைக்கு.

காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு.

வருத்தப்படாதவாறுதான் - அதைத்
திருப்பி வாங்கிக்
கட்டிக்கொண்டு வந்தேன்.

வருத்தமில்லையென்று
யார் சொன்னது என்றது
ஓடாமல் நின்ற கடிகார முள்.

பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.

(C) karthikaneya@gmail.com

Wednesday, April 15, 2009

சமீபத்தில் படித்த கவிதை: காலம்

இரண்டாய் வகுந்து கிடந்த
ஒற்றையடிப் பாதையில்
வளைந்தும் நெளிந்தும்
புணர்ச்சிக்குப் பிறகான
மயக்கத்திலிருக்கும்
வனப்பாம்பாய்
நீண்டு கிடந்த காலம்
வெம்மையைக் குடித்து
வெறி பிடித்திருந்தது

ஊடறுத்த
என் கால்களின் வயிற்றில்
உப்புப் படலங்களைப்
பிரசவிக்கச் செய்த
அதன் முகத்தில்
சாதித்த செருக்கு

குளத்தின் அலைகளைக்
கட்டிக்கொண்டு
யாத்திரை துவக்கிய காலம்
எதிர்ப்பட்ட கிழவியிடம்
குளுமையைத் திணித்ததில்
தாய்மையின் வாசம்

ஆட்டிடையனின்
வளைந்த கொம்பில்
கண்கிறங்கி
மணிச் சத்தத்தில்
தரித்த கனவை
நரிகள் கிழித்துப் புசிக்க
அலறியது

கணவனோடு சிணுங்கிக்கொண்டு
தனித்திருந்தவளிடம்
நாணம் பூசி அது
பருவத்துக்கு வந்த
அந்தக் கணம் முதல்தான்
தென்றலின் சிருங்காரத் தொந்தரவு

புள்ளினங்கள் அலைந்துருகும்
அத்துவானத்தில்
பையப் பைய
ஓர் ஆக்கிரமிப்பாளனைப் போல்
ஊடுருவும் காலம் குறித்து
எவ்விதப் பிரக்ஞையுமற்று
ஊரும் நத்தையின் முதுகில்
மனசை ஏற்றி அனுப்பிவிட்டு
நரைக்கத் துவங்கிக்கொண்டிருந்தேன்
நான்.


நன்றி: நண்பர் கதிர்பாரதி


பாராட்டுக்களைப் பதிவு செய்யவோ, விவாதத்துக்கு அழைக்கவோ மின்னஞ்சல் முகவரி. kathirbharathi@gmail.com



(C) karthikaneya@gmail.com

Thursday, April 09, 2009

வேரின் வெளி

ஒரு தொட்டிச் செடியின் வேராக
உன்னுள் சிறைப்படுவேன் - நீயோ
உன் ஆகாய வெளியாக
உணர்கின்றாய் என்னை.

(C) karthikaneya@gmail.com

Monday, April 06, 2009

இரவைத் தின்ற வார்த்தைகள்

இரவு ரயில் பயணமொன்றில்
பேச்சினிலே பேரார்வமென்று
அந்நிய மொழியில் அறிமுகமானான்
எதிர் இருக்கை சிநேகிதன்.
'டாவின்சி கோட்
இந்திய இலக்கியங்கள்
இரவு உணவு
சென்னை ஆட்டோக்கள்
தமிழகத் தந்தை
ஜெர்மன் தாய்
இங்கிலாந்து கல்வி'
இன்னும் ஏதேதோ
ஆல்கஹால் மணம் - என்
விழிகளில் பரவப் பேசிவிட்டு
உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.
உறக்கத்தின் ஊடே - ஏதோ
உணர்வு தீண்ட
திடுக்கிட்டு விழித்தேன்.
ஒருக்களித்துப் படுத்து
உற்றுப் பார்த்திருந்தவன்
விழிகளில் சந்தித்து
'டோன்ட் வொர்ரி' - என
வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.
(C) karthikaneya@gmail.com

நானும் அழகாய்த்தான் இருந்திருப்பேன்

பத்திரப்படுத்தி வைத்த - என்
பழைய உடைகளை அணிந்தது
புதிய வரவான குழந்தை.
தொட்டிலில் கிடந்த என்னை
எட்டி நின்று நான்
பார்ப்பது போலிருந்தது.

(C) karthikaneya@gmail.com

கல்யாணத் தெரு

அணில்கள் விளையாடும்
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.

(C) karthikaneya@gmail.com

குற்றவாளியின் சாயல்

உன் சிநேகம் கிடைத்தது
நான் எதிர்பாரா வேகத்தில்.
ஏற்றுக்கொள்ளத் தயங்குமளவு
இருந்தது உன் நேசம்.
எல்லாவற்றுக்கும் காரணம்
என் பெயரில் இருந்த
உன் காதலனின் சாயல்.
பின்னொரு நாள்
என் தோள்களில் சிந்திய
கண்ணீர்த் துளிகளால்
உன் காதலின் பிரிவைக் கூறினாய்.
அன்றிலிருந்து
உன் நேர்ப்பார்வை அஞ்சி
விலகிச் செல்கிறேன்.
தடயங்கள் ஏதுமற்ற காதலுக்கு
மௌன சாட்சியாக மாறியபின்
இப்போதெல்லாம் - யாரிடம்
என் பெயர் கூறும்போதும்
தொனிக்கிறது - ஒரு
குற்றவாளியின் சாயல்.

(C) karthikaneya@gmail.com

ஏதோ ஒரு பொழுது...

மழைத்துளி போல் சீராக
மரங்களின் இலைகள் சிந்த
கதவிடுக்கில் வழிவதுபோல்
காற்று மெல்ல கசிந்து வீச
அதுவரை யாரும்
அறிந்திராத சாயலில்
மஞ்சள் வெளிச்சம்
எங்கும் பரவ
மாலையோ காலையோ என
மனம் மயங்கிய பொழுதொன்றில்
மேலெழும்பி வந்து கொண்டிருந்தது
மேற்கினின்று சூரியன்.
(C) karthikaneya@gmail.com

Tuesday, March 31, 2009

இரவுப் பறவையும், நானும், பிறையும்

"முதன்முதலாய் உன்னை
இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன்
ஒரு மூன்றாம் பிறையிடம்.
"நானும் தான்" என்றது.
நான் பார்த்த பிறையைப்
பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை.
அதையும் அப்போதுதான்
பார்க்கிறேன் என்றேன்.
"ஆமாம் நானும்" என்றது பிறையும்.

(C) karthikaneya@gmail.com

Saturday, March 21, 2009

பள்ளிக் கூண்டு


பால்மணம் வீசும் மேனியில்
பறவைக் கூண்டு வாசம் மெலிதாக
பள்ளி சென்று வந்த முதல் நாளில்.

(C) karthikaneya@gmail.com

Monday, March 09, 2009

கொடி ரோஜாக்கள்


ஓரிரு நாட்கள் பூக்கின்றன
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.

(C) karthikaneya@gmail.com

உன்னதம் கொன்று...


பகிர்ந்து கொள்ள
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.

(C) karthikaneya@gmail.com

மழை பெய்யாத மழை நாள்

கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
(C) karthikaneya@gmail.com

இழையும் நட்பு

ஏதோ ஒரு தருணத்தை
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.

(C) karthikaneya@gmail.com

என் கோப நிலா


தற்செயலாய்
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.

(C) karthikaneya@gmail.com

Wednesday, March 04, 2009

ஒவ்வொன்றும் ஒன்றும்

ஒவ்வொரு துளியிலும்
மழை
என்னிடம்
ஒரே ஒரு குடை

(C) karthikaneya@gmail.com

Tuesday, February 24, 2009

ஈரம் உலரா கதைகள்

ஒவ்வொருமுறையும்
உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச்
சலிக்காமல் சொல்கிறது
சுவாரஸ்யமாகவும் - இந்த
வேலையற்ற மழை.


(C) karthikaneya@gmail.com

Wednesday, February 18, 2009

முதல்முறை

இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

(C) karthikaneya@gmail.com

உருகும் சொல்

உறைபனிக் கத்தி போல்
செருகிக் கொண்டாய்
உன் உரையாடல்களோடு
சிலவேளை நான் பரிமாறும்
மௌனங்களை.
உன்னுள் அவை
உருகத் தொடங்கியபின் பார்
ஒருபோதும் நிற்காது
என் சொற்கள்.

(C) karthikaneya@gmail.com

சிறகு

கிளையினின்று
விடுபட்ட நொடியில்
பறக்கத்தொடங்கியது
ஒரே ஒரு சருகு.

(C) karthikaneya@gmail.com

உடுக்கை நட்பு

தோழன் தோளில்போல்
வாஞ்சையோடு
கைபோட்டிருந்தது
பக்கத்து கொடியில்
என் சட்டை.

(C) karthikaneya@gmail.com

Wednesday, January 28, 2009

வட்டத்துக்கு வெளியே

எந்த வட்டத்துக்குள்ளோ
சதுரத்துக்குள்ளோ
இல்லாவிடினும்
இந்த வானுக்குக் கீழே
எங்கோ சிலர்
இருக்கத்தான் செய்கிறார்கள்
நாம் சொல்லி அழைக்கப்
பிரியப்படும் பெயருடன்.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 24, 2009

விடுதிக் குறிப்பு - அடம்பிடிக்கும் தூக்கம்

பக்கத்தில் படுக்க வைத்து
தட்டிக் கொடுத்தாலும்
கட்டிப்போட்டாலும்
கதை சொல்லிப் பார்த்தாலும்
காலில் விழுந்து கேட்டாலும்
கண் மறைத்து ஓடிவிடும்.
எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஏங்குகிற குழந்தைபோல்
எல்லா அறைகளையும்
எட்டிப் பார்த்து ஏமாந்து
என்னிடமே திரும்புகையில்
இரவு விடிந்திருக்கும்.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 10, 2009

எல்லா மழையும் மழையல்ல

இலைகளில் பனித்துளிபோல்
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!

(C) karthikaneya@gmail.com

என் இரவின் இசை

என் கைக்கடிகார
நொடிமுள்ளின் லயம் விட்டு
யார் யார் வீட்டுக்
கடிகார ஓசையெல்லாமோ
உன்னித்து ரசித்துக் கொண்டிருக்கின்றது
உறக்கம் மறுத்த
என் இரவு.

(C) karthikaneya@gmail.com

Saturday, December 27, 2008

கனவில் வந்த தூக்கம்

எப்போதும் துயிலும்
என் அறையில்தான்
நேற்றும் துயின்றபோது
என் மென்கனவில் வந்தது
நான் எப்போதும் துயிலும் அறை.
என் தூக்கம் கனவா, நிஜமா?
குழப்பம் தெளியாது
தூங்க முயற்சித்தேன்
இன்னும் கொஞ்சம்.


(C) karthikaneya@gmail.com

பகல்நிலவு

நிலவைப் போல்
நிலவைப் போல்
நடிக்க முயன்று
தோற்கிறது
மழை நாள் சூரியன்.


(C) karthikaneya@gmail.com

Saturday, December 20, 2008

மலையின் அழைப்பு

அதிகாலை வெயிலில்
இளமஞ்சள் பூசிநிற்கும் மலை
அழகாய் எனை மயக்கி
அழைக்கும்.
எழிலான பாதைகளை
ஒயிலான வளைவுகளை
இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை
எனை நோக்கி வீசி
எப்போதும் அழைக்கும்.
அகல விரிந்த தோள்களில்
முகில்கள் துஞ்சும் மடியினில்
வெயிலில் ஜொலிக்கும் கணப்பினில்
சாரல் கொஞ்சும் நாட்களில்
அப்பாவை, அம்மாவை,
சகோதரர், தோழர்களை
நினைவூட்டி மயக்கி
எனை அழைத்தவாறு இருக்கும் - மலை
மாலை நெருங்கி
இருள் கவியும் பொழுதுகளில்
விழிகள் கனல
இருட்டில் உலவும்
புலிபோல் தோற்றும்.
பகலெல்லாம் நீள நடந்தும்
ஒவ்வொரு இரவிலும்
தோற்றுப்போய் மீளும்
என் பயணங்களை
வெவ்வேறு விழிகளில்
பார்த்தவாறே உள்ளது
மலைப்புலி.
மலைக்கும் உண்டு
சில விழிகளும்
ஒரே இரவும்.

(C) karthikaneya@gmail.com

வெயில் வாசனை

மேகங்கள் உலர்ந்து கொண்டிருக்கும்
மழைக்குப் பிந்தைய நாளின்
இளங்கதிரில்...
மரக்கிளைகளில் ஊடுருவும்
முதல் கீற்றில் மிதக்கும்
தூசுகளில்...
துவைத்து உலர்த்திய
ஆடைகளின் தூய
நூலிழைகளில்...
மதிய நேர மைதான
விளையாட்டின்பின்
முழங்கால் புழுதியில்...
மாலை நேரத்து
வாயில்களெங்கும்
நீர் தெளிக்கப்படுகையில்...
எழுகின்ற வெயிலின் வாசம்
எழுந்து கொண்டிருந்தது
வீட்டு வாசலில்
விழுந்து கிடந்த
காய்ந்த சருகினின்றும்.

(C) karthikaneya@gmail.com

பழுத்த இலைகள்

பன்னீர் மரங்கள் இரண்டு
பழுக்கத் துவங்கிய மாமரமொன்று
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு.
பூச்செடிகள் வளர்க்க
அப்பாவின் விருப்பம்.
புதிதாய் ஒரு ரோஜாச் செடி
பதியன் போட்டிருப்பதாய்
குதியாட்டம் போட்டான் தம்பி.
தம்பி ஒருமுறை
அம்மா ஒருமுறை
தண்ணீர் ஊற்றிவர
அப்பா சென்று ஒருமுறை
அன்பை ஊற்றி வருவார்.
மலரும் முன்பே
ரோஜாவின் புராணம்
மணம் வீசத் துவங்கியது
வீடு முழுவதும்.
ஒருநாள் காலை
புழக்கடைப் பக்கம்
புழங்கியபோது கண்டேன்
வளர்ந்து விட்டிருந்த செடியில்
குழந்தையின் சிரிப்பாக
இளஞ்சிவப்பு ரோஜா.
பல நாட்களாய்
என் தோட்டத்தில்
வளர்ந்து வந்த செடியில்
பழுத்த இலைகளும்
உதிர்ந்திருக்கலாம்
பார்த்ததில்லை நான்
அப்போது.

(C) karthikaneya@gmail.com

பாவம் என் தனிமை

வெற்றுத் தரையில்
வெயிலைக் குறிவைத்து
மொட்டை மாடியில்
இறங்கின சில புறாக்கள்.
நான் விசிறிப்போட்ட
நினைவுகளை - அவை
கொத்தத் துவங்கியபோது
குருதி வழிய
விலகிச் சென்றது
என் தனிமை.

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 17, 2008

ஏன் அப்படி?

ஒவ்வொரு முறை
ஊர் திரும்பும்போதும்
வெகு தொலைவு
நகர்ந்திருக்கிறது
எப்போதும்
அங்கேயே இருக்கும்
என் ஊர்.

Wednesday, December 10, 2008

மிகச் சிறிய மாற்றம்

நெடுநாள் கழிந்து
சென்றபோதும்
நேற்றுதான்
பார்த்தது போல்
இருந்தது
எனது ஊர்.
எந்த மாற்றமும் இல்லாமல்
எல்லாரும்
எல்லாமும்.
பறவைகள்
மனிதர்கள்
பாதைகள்
நதி
உதயம்
அஸ்தமனம்.
ஒன்றும் பெரிய மாற்றமில்லை
சாலைகள் கொஞ்சம்
கருத்திருந்தன
மலைகள் கொஞ்சம்
மெலிந்திருந்தன
என்பதைத் தவிர.

(c) karthikaneya@gmail.com

மலர்த்துளிகள்

மலர்கள் அனைத்தையும்
சிந்தச் செய்து
சென்றது மழை.
கொஞ்சமும் கோபமின்றி
மரங்கள் இப்போது
சிந்திக் கொண்டிருக்கின்றன
மழைத் துளிகளை.

Saturday, November 15, 2008

அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்

தோள்களிலே எனைத் தூக்கி
'உப்புமூட்டை' என்றவர்கள்

சலிக்காமல் நாள்தோறும்
பல கதைகள் சொன்னவர்கள்

விளையாட்டில் வலிந்து சேர்த்து
தோற்கடித்துச் சிரித்தவர்கள்

முகம் சிவந்து அழுதபோது
முத்தமிட்டுத் தணித்தவர்கள்

கடற்கரையில் கைப்பிடித்து
அலையாடிக் கழித்தவர்கள்

ஏனென்றே தெரியாமல்
'யானை-பானை' என்றெல்லாம்

செல்லப் பெயரிட்டுச்
சீண்டி ரசித்தவர்கள்

இப்போது இயற்பெயரால் கூட
அழைப்பதில்லை என்னை.

என்ன செய்யக்கூடும்?
அண்ணன்களாகிவிட்டார்கள்
என் அண்ணன்கள்.

Wednesday, November 12, 2008

காரணமல்லாத காரணம்

உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை
'உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை'
என்பதைத் தவிர.

Tuesday, November 11, 2008

கனவில் திரியும் உயிர்

நீ சிந்திச் சென்றிருந்த
ஓரிரு அன்புச் சொற்களை
என் கனவு வெளியெங்கும்
கொத்தித் திரிந்தவாறு
இருக்கிறது உயிர்ப்பறவை இன்னும்.

Saturday, November 08, 2008

உலராத் துளிகள்

கொடிகளில்
காய்ந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகள்.
உடைகளை
உலர்த்த
காத்துக்கொண்டிருக்கிறேன்.


கோடை விளையாட்டு

வெயிலோடு
கண்ணாமூச்சி ஆடும்
வேப்ப நிழல்.

மழையல்ல, மழை!

எண்ணத் தொலையாத துளிகளில்
எனக்கான கவிதைகளை
ஏந்தி வரும் மழை.
நனைதலின் ஆனந்தத்தில்
நழுவவிட்ட அத்தனை துளிகளின் பின்
நகக்கண் ஓரம் நழுவி விடைபெறும்
ஒரு துளியைத் தக்க வைத்து
எழுதிடுவேன் ஒரு கவிதையேனும்.
என்றாலும் இயலாது
என் மழை அனுபவம் இயம்ப
எத்தனை கவிதைகளாலும்.

Sunday, October 05, 2008

சிறகுகள்

சிறைக்கூரைமேல்
இளைப்பாறுகின்றன
சில புறாக்கள்.

நிலவு ஏமாந்த நேரத்தில்...

வீடுகள்தோறும்
நட்சத்திரங்களை
அழைத்துவந்தது
மின்சாரம் தடைப்பட்ட இரவு.

நானும் நானும்

வெயில் மிதக்கும்
மூங்கில் காடுகளின்
துளைகளுக்குள்
புகுந்து புகுந்து புறப்படும்
ஒற்றைக்குயில் பாடும் ராகம்.
பகல் முழுவதும்
பாடலில் லயித்த சூரியன்
கூடு திரும்பும் வேளையில்
ஒற்றைககுயிலுக்குத் துணை நான்தானோ?
ஒற்றைக்குயிலே நான்தானோ?

Thursday, October 02, 2008

மனம் காட்டும் கண்ணாடி

சூரியத் துணுக்குகள்
மோத மோத
இசையெழுப்பி
நடக்கும் நதி.

நதியின் இசை
நாணலுக்குத் தாலாட்டு.

தாலாட்டில் கலையாது
தவமிருக்கும் நந்தவனம்.

நந்தவனங்கள் வழியே
உனை அடையும் பாதை.

பாதை எங்கும் பார்த்தேன்
பூவிதழ்களில் கண்ணீர்த் துளி.
நீ பாராமல் நடந்தாயாம்.

நடந்து சென்ற உன்
தோள்களின் மேல்
இரு சிறகுகள் இருந்ததாய்
ஒரு தேவதைக் கற்பனை.

கற்பனையின் கதவுகள்
கண்கள் வழி திறக்கின்றன;
பேனாவின் ஊற்றுக்கண்கள் வழி.

எழுதியபின் பார்த்தேன்.
கற்பனையின் பிம்பங்கள்
காகிதக் கண்ணாடியில்.

நான் மனம் பார்க்கும்
கண்ணாடி நீதான்.
என் மனதைக் காட்ட
என்னையே பூசாதே
பாதரசமாய்.

நேரம் சரியாக...

வீட்டின் அறைகள் யாவற்றிலும்
கடிகாரம் இருப்பது பெருமைதான்
நேற்று முன்தினம் வரை.
நேற்று முற்பகலில்
பாத்திரம் ஒன்றை அடுப்பிலேற்றி
பத்து நிமிடத்தில் இறக்கும்
பணி கிட்டியது. (உபயம்: தமக்கை)
சமையலறையில்
சரியான நேரம் பார்த்து விட்டு
கூடத்துக்கு வந்தேன்.
குழம்பிப் போனேன்.
மூன்று நிமிடம்
முன்னே சென்றது
கூடத்துக் கடிகாரம்.
சமையலறை, கூடம் என
மாற்றி மாற்றி மணி பார்த்து,
தலைசுற்றிப் போய்
தாழ்வாரம் வந்து
தாம்புக் கயிற்றில் தொங்கும்
ஊஞ்சலில் சாய்ந்தேன்.
தாழ்வாரத்துத் தலையாட்டும் கடிகாரமோ
தயங்கித் தயங்கித்
தலையசைத்து ஐந்து நிமிடம்
தாமதமாய்ச் சென்றது.
சரியான நேரமெனைச்
சனி போல் பின்தொடர
படுக்கையறைக்குள் சென்றேன்.
பல்லிளித்தவாறே
பத்து நிமிடம் முன்னே
பாய்ந்து சென்றது
கோமாளிக் கடிகாரம்.
சரியான நேரத்தைச்
சரி செய்யும் என் ஆய்வில்
முடிவு கண்டேன்
காய்கறியில் நீர் வற்றித்
தீயும் மணம் வந்தபோது.
'நேரம் சரியாக இப்போது' என்று
சொல்லிமுடிக்கப்படும் நேரம் ஒன்று
இல்லை இல்லை எப்போதும்.

மொட்டைமாடி விளையாட்டு

கொஞ்ச நேரம் உலாவச் செல்கையில்
கோபித்துக் கொண்ட குழந்தை போல்
மௌனித்து இருக்கும்
மரங்களின் இலைகளிலே.
பார்த்திருந்து அலுத்துவிட்டு
படியிறங்கப் போகையிலோ
கொஞ்சித் தோள் தொட்டுக்
கூப்பிட்டு - என்னை
அல்லாடவிடும் இந்தப்
பொல்லாத தென்றல்.

Tuesday, September 23, 2008

பொக்கெட் ஷாப்பில் ...

கண்ணாடிக் கதவில்
முட்டிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி.

Sunday, September 14, 2008

காக்கை விடு தூது

கலைந்து போன தலையோடு
காலையிலேயே அவசரமாய் வந்த காகம்
வீட்டு வெளிச் சுவரில் அமர்ந்து
விருந்தினர்கள் வருவார்கள் எனக் கரைந்தது.
வெளியே செல்கிறோம்
நீ போய் நிறுத்திவிடு - என்று சொன்னேன்.
காஃபி தந்து அனுப்பலாம் என நினைக்கையில்
பறந்து சென்று விட்டது - பாவம்,
தூது சொல்ல வந்த காகம்.

மழையின் அலுவல் நேரம்

ஐந்து நிமிடங்கள்
தாமதமாய்க் கிளம்பாததால்
தவறவிட்டேன்
அலுவலக நேரத்தில்
பெய்யத் துவங்கிய மழையை.
[அலுவலக நேரத்துக்கு சரியாகக் கிளம்பி, பேருந்தைத் தவற விட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக]

Wednesday, September 03, 2008

என்னைக் குழந்தையாக்கிய கட்டில்

சதுரமும் அன்றி செவ்வகமும் அன்றி
நாற்கரமாய் இருந்தது
நான்கு படுக்கைகள் கொண்ட விடுதி அறை.
இடது சுவரோரமாய் இருந்த
எனது கட்டிலை
எப்படி திருப்பினாலும்
இடைவெளி இருந்தது
சுவருக்கும் கட்டிலுக்கும்.
வேறெப்படியும்
மாற்ற முடியுமா அல்லது
வேறு கட்டிலுக்கு நான்
மாறி விடுவதா என்றெண்ணியவாறே
தூங்கிப் போனேன்.
புரண்டு படுத்தபோது
கட்டில் இடைவெளியில்
கை விழுந்து ஊசலாடியது,
குப்புறப் படுத்துக்கொண்டு
தொட்டிலில் விளையாடிய
குழந்தை நாட்களை நினைவூட்டியது.
பின்
அப்படியே இருக்கட்டும் என
விட்டுவிட்டேன் கட்டிலை.

மழை துவங்கிய அரட்டை

மனம் விட்டுப் பேசியவாறு
மழையில் நனைந்து வந்தோம்.
சாலையோரக் கடைக்காரர்
சற்று நின்று போகச் சொன்னார்.
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
மறுபடி தொடர்ந்தது அரட்டை.
ரயில் கிளம்ப சில நிமிடம் இருக்க
இடைவெளி விட்டது மழை.
ஓடிச் சென்று ஏறிக்கொண்டு
விருப்பமில்லாதது போல்
விரும்பி அமர்ந்து கொண்டோம்
மழை நனைத்த இருக்கைகளில்.
ஒடுங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும்
ஓய்ந்து போன மழையை எண்ணி
ஒன்றும் பேசாமலே இருந்தோம்.
ரயில் நகரத் தொடங்கியபோது
மீண்டும் அரட்டையைத் துவங்கி வைத்தது
அப்போது பெய்யத் துவங்கிய மழை.

விடுதிக் குறிப்பு - 2

என் அறையின்
குறுக்கே விழும்
சாளரத்தின் வழி
சாயும் நிலவொளி
இரவின் நீளத்தை
அளந்து சொல்லும்.

காலைப் பனியில்
கதவருகே பூத்திருக்கும்
தங்க அரளி மலர்கள்
தனிமை ஏக்கம் தரும்.

எதிரே தெரியும்
கட்டடப் பின்புறங்களில்
இளைப்பாறும் புறாக்கள்
எதிர்பாராத போது
தலை திருப்பிப் பார்ப்பது
தோழமை உணர்வு தரும்.

இழப்புகள் பழக்கித்தரும்
எதிர்பாரா நட்பு தரும்
வேதனை மகிழ்ச்சி
விடுதி வாழ்க்கை.

Saturday, August 23, 2008

விடுதிக் குறிப்பு

நான்காம் வேற்றுமைக்குச்
சான்று தரச் செல்லவில்லை.
எழுதுகோல் வாங்கத்தான் சென்றேன்.
என்றாலும்
'வீட்டுக்கு, வீட்டுக்கு' என
எழுதிப் பார்த்தேன்.
விடுதியில் இருக்கிறேன் நான் இப்பொழுது.